×

செப்.28ல் இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, செப்.23: இளையான்குடியில் செப்.28 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. செப்.28 அன்று காலை 10 மணியளவில், சிவகங்கை ஆர்டிஓ தலைமையில் இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், யுடிஐடி பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிற துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள், வங்கி கடனுதவி, வேலைவாய்ப்பு பயிற்சி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பராமரிப்பு உதவித்தொகை, வருவாய்த்துறை மூலம் உதவித்தொகை, 18 வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆகியன வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் போட்டோ 4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ilayayankudi ,
× RELATED தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்