கிருஷ்ணகிரி, செப்.23: கிருஷ்ணகிரி, ஓசூரில் 2 பேரிடம் ஆன்லைனில் ரூ.5 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி செந்தில்நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (43). இவர் பத்திரப்பதிவு ஆவணங்கள் தயார் செய்யும் அலுவலகம் நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு தனியார் பேப்பர் கம்பெனியில் இருந்து பேசுவதாக கூறி தொடர்பு கொண்ட நபர்கள், ‘உங்களுக்கு தேவைப்படும் பேப்பரை பாதி விலைக்கு தருகிறோம். முதலில் அட்வான்ஸ் மட்டும் செலுத்துங்கள்,’ என கூறியுள்ளனர். இதேபோல் 3 முறை அவருக்கு போன் வந்ததால், சிவசங்கரும் பேப்பர் வாங்கி கொள்வதாக கூறி, ரூ.3 லட்சத்து 2,240 ரூபாயை அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி பேப்பர் அனுப்பி வைக்கவில்லை. பின்னர், அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவசங்கர், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.