ஈரோடு தாலுகா அலுவலகத்தில் கோப்புகள், பதிவேடுகளை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு

ஈரோடு, செப். 23:  ஈரோடு தாலுகா அலுவலகத்தில் கோப்புகள், பதிவேடுகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான ஆண்டு தணிக்கை மேற்கொண்டார். தாலுகா அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகள், குற்றவியல் விசாரணை முறை சட்டம் தொடர்பான பதிவேடுகள் மற்றும் தொடர்புடைய கோப்புகள், படைக்கல உரிமம், வெடிபொருள் உரிமம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தொடர்பான பதிவேடுகள், அரசு நிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான கோப்புகள், நிலவரி இனங்கள் தொடர்பான கோப்புகள், நிலம், கனிமம் மற்றும் பதிவறை பதிவேடுகள், கோட்ட அளவில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனு மீதான நடவடிக்கை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.  

மேலும் பட்டா மேல் முறையீட்டு நடவடிக்கை, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு தொடர்பான பணி முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்தும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிகாரிகளிடம் விசாரித்தார். மேலும் அலுவலகத்தில் உள்ள பதிவறை மற்றும் நில அளவை பிரிவு, இ-சேவை மையம், வட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட சார்நிலை கருவூலம் ஆகியவற்றையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம், பேரிடர் மேலாண்மை தாசில்தார் அஸ்ரப் நிஷா உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: