கோவை, செப்.23: கோவை அரசு மருத்துவமனையில் கேன்சர் நோயாளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கும் ‘ரோஸ் டே’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவை அரசு மருத்துவமனை மண்டல புற்றுநோய் மையத்தின் மூலம் தினமும் 150க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது உள்நோயாளிகளாக மட்டும் 60-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம், கோவை கிழக்கு ரோட்டரி கிளப், இன்னர் வீல் அமைப்பு இணைந்து அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரோஜாப்பூ வழங்கும் கேன்சர் ரோஸ் டே நிகழ்ச்சி நடந்தது. இதில், மருத்துவமனையின் டீன் நிர்மலா, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் சுரேஷ்வெங்கடாசலம், கதிர்வீச்சு துறைத்தலைவர் மதுமிதா, முதுநிலை டாக்டர்கள், நர்சுகள் என பலர் பங்கேற்றனர். இதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.