கோயிலை சுற்றிலும் பார்க்கிங்கிற்கு தடை ஸ்ரீரங்கத்தில் 5 ஏக்கரில் பிரமாண்டமாக தயாராகும் வாகனம் நிறுத்துமிடம்ஸ்ரீ அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு

திருச்சி,செப்.23: 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் சித்திரை தேரோட்டம் பிரசித்தி பெற்றது. இதில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து, ராப்பத்து என நடக்கும் விழாவில் முக்கியமான சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் வெளியூர் பக்தர்கள் வசதிக்காக பஞ்சக்கரை கொள்ளிடக்கரையில் யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டு குறைந்த வாடகையில் பக்தர்கள் தங்கி பெருமாளை தரிசிக்கும் வகையில் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் வருடந்தோறும் அனைத்து நாட்களிலும் திருவிழா நடப்பதால் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர்.

இதில் பக்தர்கள் கார், வேன் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து கோயிலின் மதில் சுவர் அருகே உள்ள உத்திரவீதிகளில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் வாகனங்களை நிறுத்த மாற்று இடத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான இடம் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இதில் பஞ்சக்கரை கொள்ளிடக்கரையில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான இடம் இருப்பதும் அதனை கேட்டு பெற்று பிரமாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதாலும், பக்தர்கள் வந்து செல்லும் வாகனங்கள் கோயிலின் மதில்சுவர் அருகே நிறுத்தப்படுவதாலும் சாலை குறுகலாக இருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் வரும் கார், வேன், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு பஞ்சக்கரை யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடக்கரையில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் சுமார் 5 ஏக்கர் இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், மேயர் அன்பழகன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறையினருக்கு கடிதம் எழுதி உள்ளனர். விரைவில் அனுமதி கடிதம் வந்த பின்னர், பணிகள் துவங்கி பிரமாண்ட வாகன நிறுத்துமிடம் கட்டப்படும். தொடர் ந்து வாகனங்களில் வரும் பக்தர்களை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான பஸ்களில் அழைத்து வந்து கோயில் வாசலில் விடப்படும். அதுபோல் தரிசனம் முடிந்து மீண்டும் தங்கள் வாகனங்களை எடுக்க கோயில் பஸ் மூலம் கொண்டு விடுவதற்கான ஏற்பாட்டுடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் துவங்கும் என்றார்.

Related Stories: