வேலூர், செப்.22: வேலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டப்படுகிறது. வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை விட அதிகமாக புதிதாக மரங்களை நட்டு, வளர்க்க வேண்டும் என மாநில நெடுஞ்சாலை துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் கோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் பரிக்கப்பட்டு, ராணிப்பேட்டை புதிய கோட்டம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் கோட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் உட்கோட்டத்தில் இந்தாண்டு 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காகிதப்பட்டறையில் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து, வேலூர் கோட்ட பொறியாளர் தனசேகரன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர்கள் பிரகாஷ், சுகந்தி, சம்பத்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 1,000 மரக்கன்று நடும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.