நாகர்கோவில், செப்.22: குற்ற செயல்களை தடுப்பதில் சிறப்பாக பணியாற்றிய அதிவிரைவுப்படை காவலர்களை நேரில் அழைத்து குமரி மாவட்ட எஸ்.பி ஹரி கிரன் பிரசாத் பாராட்டினார். குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிவிரைவுப்படையினரை பேருந்து நிலையம், கடற்கரை போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்ற செயல்களை தடுக்க இருசக்கர வாகன ரோந்து பணி என பல்வேறு பணிகளில் நியமித்திருந்தார். இந்நிலையில் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனைகளை தடுக்கவும், பல்வேறு வழக்குகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை பிடிக்கவும் காவல்நிலைய அதிகாரிகளுக்கு உதவியாக இருந்த அதிவிரைவுப்படை அதிகாரிகள், காவலர்களை எஸ்.பி ஹரி கிரன் பிரசாத் நேரில் அழைத்து பண வெகுமதி அளித்து பாராட்டினார். வரும் காலங்களில் இந்த சிறப்பான பணி தொடர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
புகார் அளிப்போரின் வீடுகளுக்கே சென்று விசாரணைகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் அதிகமாக புகார் மனுக்கள் விசாரணைக்கு நிலுவையில் உள்ளது. விசாரணையை விரைவில் முடிக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாலை ரோந்துக்கு செல்லும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் புகார் மனு அளித்தவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை மேற்கொள்ள குமரி மாவட்ட எஸ்.பி ஹரி கிரன் பிரசாத் உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் புகார் மனுக்கள் மீது நேர்மையான விசாரணை நடைபெறுவதுடன், பொதுமக்கள் போலீஸ் நல்லுறவும் மேம்படும். மேலும் போலீசார் மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பதால் பொதுமக்களிடயே பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்கிறது. இத்திட்டமானது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று குமரி மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.