அதிகாலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்த போது பெண்ணை தாக்கி செயின் பறிப்பு குலசேகரம் அருகே பரபரப்பு

குலசேகரம், செப்.22: குலசேகரம் அருகே நேற்று அதிகாலை பென்ணை தாக்கி செயினை பறித்து சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குலசேகரத்தை அடுத்த கல்லடி மாமூடு பகுதியை சேர்ந்தவர் மரிய செல்வி (63). இவர் நேற்று அதிகாலை தனது வீட்டின் முன்பகுதியை சுத்தப்படுத்திக்கொண்டு  இருந்தார். அப்போது அங்கு முகக்கவசம் அணிந்தபடி பைக்கில் 2 வாலிபர்கள்  வந்தனர். திடீரென்று 2 பேரும் மரிய செல்வியின் கழுத்தில் கிடந்த 2.5 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றனர். உடனே அவர் கூச்சலிட்டார். இதனால்  ஆத்திரமடைந்த வாலிபர்கள், பெண்ணின் வாயை பொத்தி கீழே தள்ளி   செயினை பறித்துவிட்டு பைக்கில் ஏறினர்.

மரிய செல்வியின் அலறல் சத்தம்  கேட்டு வீட்டுக்குள் இருந்த அவரது மகன் ரமேஷ் குமார் உள்பட அக்கம்  பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்து திருடர்களை துரத்தி பிடிக்க முயன்றனர். ஆனால் 2 பேரும் திருவட்டார் நோக்கி மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி  சென்று விட்டனர். இந்த தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ  இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இது குறித்து  ரமேஷ் குமார் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற 2 பேரை தேடி  வருகின்றனர்.

Related Stories: