கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த பெண் பிடிபட்டார்
சென்னை, செப். 22: வியாசர்பாடியில் கள்ளச்சந்தையில் மதுபானம் பதுக்கி விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பகுதியில் பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பு மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்காருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று காலை 11 மணியளவில் எம்கேபி நகர் போலீசார் எம்கேபி நகர் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டிலை பதுக்கி விற்ற வியாசர்பாடி பி.கல்யாணபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த விமலா (31) கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.