நெல்லை, செப். 21: தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நாளை (22ம் தேதி) தொடங்கி 30ம் தேதிவரை நடக்கிறது. இதற்காக முதன்மைக்கல்வி அலுவலர் ஏற்பாட்டில் அந்தந்த மாவட்ட அளவில் பொது வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 கல்வியாண்டுகள் 'கொரோனா' பரவல் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாததால் தேர்வுகள் சீராக நடத்த முடியாத நிலை தொடர்ந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து எந்த பிரச்னையுமின்றி நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (22ம் தேதி) காலாண்டு தேர்வுகள் தொடங்குகிறது. முதலில் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு தேர்வு தொடங்கும். அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தொகுத்தறியும் மதிப்பீட்டு தேர்வு என்ற முறையில் பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
இந்த நாட்களில் 6, 8,10ம் வகுப்பு மாணவர்களுக்கு பகலிலும், 7, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்துவதற்கு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட அளவிலேயே பொது வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை நோடல் சென்டர்களில் வைக்கப்பட்டு அந்தந்தத் தேர்வு நாளில் பள்ளிகளுக்கு வழங்க மாவட்ட கல்வி அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். அனைத்து தேர்வுகளும் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும். அதன் பின்னர் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை தசரா பண்டிகையை ஒட்டி வழங்கப்படுகிறது. அதன் பின்னர் மீண்டும் அக்டோபர் 6ம் தேதி பள்ளிகளை திறக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பொது வினாத்தாள்களை தேர்வு நாள்களில் வழங்க 20 நோடல் சென்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு முன்னர் வினாத்தாள்கள் கசியாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கு தேவையான ஆலோசனைகளை கல்வித்துறை உயர் அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.