டேன் டீ தொழிலாளர்களுக்கு ரூ.29.38 கோடி நிலுவை தொகையை அமைச்சர் வழங்கினார்

குன்னூர், செப்.21: டேன் டீ தொழிலாளர்களுக்கு சட்டபடி வழங்க வேண்டிய நிலுவை தொகை சுமார் 29.38 கோடி ரூபாயை வனத்துறை அமைச்சர் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது குன்னூரில் அமைந்துள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைளை கேட்டறிந்தார். டேன்டீ கழகத்தை லாபம் ஈட்டக்கூடியதாகவும், செம்மையாகவு நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் முடிவெடுப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு  முதல் பணிக்கொடை, முனைய விடுப்பு ஊதியம் மற்றும் இதர சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பயன்களான விடுப்புடன் கூடிய ஊதியம், மருத்துவ ஊதியம் வழங்க தேவையான 29.38 கோடி ரூபாயை விடுவிக்க கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்பட்டது.

இத்தொகையினை வழங்குவதன் மூலம் 1066 ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் 101 ஓய்வு பெற்ற ஊழியர்களும் பயன்பெறுவர். மேலும், தற்போது பணிபுரிந்து வரும் 3800 நிரந்தர தொழிலாளர்களும் மற்றும் 212 ஊழியர்களும் பயன்பெறுவர்.

அதன்படி அரசிடமிருந்து ரூ.29.38 கோடி நிதி  பெறப்பட்டது. அதனை வனத்துறை அமைச்சர்  கா. ராமச்சந்திரன் நேற்று தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், குன்னூர் பதிவு அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக நிர்வாக இயக்குநர்  மஞ்சுநாதா, ஐஎப்எஸ். பொதுமேலாளர்  ஜெயராஜ். ஐஎப்எஸ் மற்றும் இதர டேன்டீ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: