ரூ.3.33 கோடியில் சீரமைப்பு பணி பூர்த்தியானது: இயற்கை எழில் கொஞ்சும் காடையம்பட்டி ஏரி

பவானி, செப். 21:  இயற்கை எழில் கொஞ்சும் காடையம்பட்டி ஏரியை ரூ.3.33 கோடியில் சீரமைத்து மினி சிறுவர் பூங்கா, பேவர் பிளாக் நடைபாதை என உலக சுற்றுலா தரத்தை ஏற்படுத்திய ஆண்டிக்குளம் ஊராட்சி நிர்வாகத்தின் அசத்தல் பணிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பவானி ஊராட்சி ஒன்றியம், ஆண்டிக்குளம் ஊராட்சியில் இயற்கை எழில் சூழ்ந்த பேரழகுடன் பவானி - அந்தியூர் ரோட்டில் 43 ஏக்கர் பரப்பில் காடையம்பட்டி ஏரி அமைந்துள்ளது. மேட்டூர் மேற்கு கரை பாசன பகுதியில் இருந்து வெளியேறும் கசிவுநீர் மற்றும் மழைநீர் வரத்து இந்த ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்த ஏரியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ரூ.3.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, ஏரியில் நீர் நிரம்பி இருந்ததாலும், கொரோனா தொற்று போன்ற காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் மந்தமாக நடந்தது. இந்நிலையில், தற்போது பணிகள் முழு வீச்சில் வேகப்படுத்தப்பட்டு பூர்த்தி அடைந்து ஏரியும் பூங்காவும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

முன்னதாக, இந்த ஏரியில் தண்ணீரை அதிக அளவில் சேமிக்கும் வகையில் தூர்வாரும் பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஏரி கரைகளில் மண் கொட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டது. மேலும், ஏரிக்கு நீர் வரத்து கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேறும் பாதைகள் தூய்மைப்படுத்தப்பட்டன. ஏரியின் பக்கவாட்டு கரைகள், கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டது. இதுதவிர, அந்தியூர் ரோட்டில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதி வரையில் ஏரிக்கரையில் பேவர் பிளாக் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டது.

இதேபோல ஏரியின் எல்லை முடிவில், ஜீவா நகர் பிரிவு வரையில் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டு, தடுப்புச்சுவரும் இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏரியின் கரையோரத்தில், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா மற்றும் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடும்பத்துடன், குழந்தைகளுடன் வந்து நடை பயிற்சி மேற்கொள்ளவும், பொழுது போக்கவும் உகந்த இடமாக இயற்கை எழில் சூழ்ந்த சூழலில் ஏரிக்கரை பசுமையாகவும், அழகாகவும் முன்பு இருந்த தோற்றமே, முழுமையாக மாறிப் போயுள்ளது. இதனால் இப்பகுதி விரைவில் ‘மினி சுற்றுலா தலமாக மாறும் என்பதால் பொதுமக்கள் பெரிதும் ஆச்சரியத்தில் அசந்து போயுள்ளனர்.

படகுப்பயணம் அமையுமா? என்பது குறித்து ஆண்டிக்குளம்  ஊராட்சி தலைவர் பத்மா விஸ்வநாதன் கூறுகையில்,  ‘‘மேட்டூர் மேற்கு கரை பாசனத்தில் கசிவு நீரால் காடையம்பட்டி ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. தற்போது சிறுவர் பூங்கா உள்ளிட்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் படித்துறையும் கட்டப்பட்டுள்ளது. 43 ஏக்கர் பரப்பில் இந்த ஏரியில் பொழுதுபோக்கு அம்சத்தை மேம்படுத்த படகு, பரிசல் பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டால் குடும்பத்துடன் வரும் பொது மக்களுக்கு மேலும் மகிழ்ச்சி உண்டாகும். பூங்காவை பராமரிக்கும் ஊராட்சி நிர்வாகத்துக்கும் வருவாய் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதற்கான நடவடிக்கைகள் முனைப்புடன் எடுக்கப்படும் ’’ என உறுதியளித்தார்.ஆண்டிக்குளம் ஏரியில் சுற்றுச்சூழல் பணிகள் மேம்படுத்தப்பட்ட நிலையில், அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லும்போது சுற்றுப்புற பகுதிகளில் வியாபாரம் பலமடங்கு அதிகரிக்கும். பவானி மக்களுக்கு திரைப்படத்தை, தவிர வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில் இந்த ஏரியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் போது இயற்கை சூழல் நிலவுவதால் வார இறுதி நாட்களிலும் உடல், மன ஆரோக்கியத்துடன் பயனுள்ள வகையில் மாலை பொழுதை கழிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே நிஜம்.

இதையடுத்து உலக சுற்றுலா தரத்திற்கு உள்ளூர் ஏரியை மாற்றிய ஆண்டிக்குளம் ஊராட்சி நிர்வாகத்திற்கும், தலைவர் பத்மா விஸ்வநாதன் தலைமையிலான நிர்வாகத்திற்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் நவீன கழிப்பறை வசதி காடையம்பட்டி ஏரிக்கு  அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், அப்பகுதி மக்களும்  பயன்படுத்தும் வகையில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து பொது கழிப்பறை  கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் திறந்தவெளியை  கழிப்பறையாக பயன்படுத்துவதை தடுப்பதுடன் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும்  பாதுகாக்கும் சூழல் உருவாகியுள்ளது.

குடிமகன்களை தடுக்க வேண்டும்

பொதுவாக,  ஏரிக்கரை, வாய்க்கால் கரை என அனைத்து பகுதிகளிலும் ஒதுக்குப்புறமான  இடங்களை குடிமகன்கள் ஆக்கிரமித்து கொள்வது தொடர்ந்து வருகிறது. இந்த ஏரி பல  கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா தலமாக  விரிவாக்கம் அடையும் வகையில் ஏரியின் சுற்றுப்புற பகுதிகளில் குடிமகன்கள்  அமர்ந்து மது அருந்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள்  மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக வருவோர் பாதுகாப்புடன் வந்து செல்ல  தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: