கம்மாபுரம், செப். 13: கடலூர் மாவட்டம் முழுவதும் 683 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி நிர்வாகங்களை கவனிக்கும் எழுத்தர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி செயலர்கள் எனப் பெயர் மாற்றப்பட்டனர். இவர்கள் மாத சம்பளம் 9,700 ரூபாய் பெற்று வந்தனர். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் இவர்கள் மூலம் தான் அமல்படுத்தப்படுகிறது. பணிச்சுமை கூடுதலாக இருந்தபோதும், அதற்குரிய சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதில்லை என புலம்பும் அவலம் நீடித்தது. அரசு துறைகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளருக்கு இணையான சம்பளம், கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக தங்களின் சங்கத்தை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்துடன் இணைத்துக்கொண்டனர். நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு, அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பதிவுறு எழுத்தர்களுக்கு வழங்கும் சம்பளத்தை வழங்க சம்மதம் தெரிவித்தது.