காட்டுமன்னார்கோவில், செப். 13: கடலூர் மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிக்காக வெட்டப்படும் செம்மண்ணை ஒப்பந்ததாரர்கள் தனியாருக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் இருந்து அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வரை ரூ.550 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக வீராணநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நிலத்தில் பணிதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு நிலங்கள் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் வருவாய்த்துறை அனுமதியின்பேரில் செம்மண் வெட்டப்பட்டு இந்த டாரஸ் லாரிகளின் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாரைக்கால் ஏரியில் முறைகேடாக சுமார் 30 அடி ஆழம் வரை தோண்டி செம்மண் கடத்தப்பட்டு மேற்கண்ட பணித்தளத்தில் கிடங்கு அமைத்து சேமிக்கப்பட்டது.