மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில் திடக்கழிவு திரவக் கழிவு மேலாண்மை, புதிய குளங்கள் அமைத்தல் ஆகிய பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதால் மாநிலத்திலேயே முதல் சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கு, தமிழ்நாடு அரசு விருது வழங்கி பேரூராட்சியின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் சிறப்பு நிதிசுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டது.
தற்போது, இந்த பேரூராட்சியில் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டம் மூலம், கருங்குழி பகுதியில் உள்ள மயானத்தில் ரூ.1.35 கோடி மதிப்பிலான நவீன ஏரியூட்டு தகன மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பேரூராட்சி தலைவர் தசரதன், துணை தலைவர் சங்கீதா, மதுராந்தகம் நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் சத்திய சாய், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.