காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பணத்தை பெற்று மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் ஊழியர்கள் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வங்கிசாரா தனியார் நிதிநிறுவனம் (ஐஎப்எஸ்) காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 5ம் தேதியன்று தமிழகம் 21 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் பகுதியில் இந்த நிறுவனத்தின் முகவராக செயல்பட்ட மின்மினி சரவணகுமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மின்மினி சரவணகுமார் சரியாக ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 3 மாவட்டங்களின் இயக்குனராக இருந்து வரும் ஜெகன் என்கின்ற ஜெகநாதனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சுப்புராஜ் என்பவர் மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது.