நாகர்கோவில்: நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துகழக குடியிருப்பு வடக்குத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நாகர்கோவில் மணிமேடை அருகே உள்ள ஒரு செல்போன்கடையில் ரூ.51 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ஒரு வருட வாரன்டியுடன் வாங்கியுள்ளார். செல்போன் வாங்கி பயன்படுத்திய சில நாட்களில் செல்போன் சார்ஜ் போடும்போது அதிக வெப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் டிஸ்பிளேயில் கலர் கோடும் விழுந்துள்ளது. இது தொடர்பாக செல்போன் கடையில் தெரிவித்தபோது, சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரிசெய்துகொள்ள தெரிவித்துள்ளனர்.
சர்வீஸ் சென்டரில் கொடுத்தபோது, பலநாட்கள் வைத்துவிட்டு, செல்போனை சரிவர செய்யாமல் கொடுத்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிரபாகரன் செல்போனின் விலையை திரும்ப கிடைக்க கேட்டு கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையத்தலைவர் தாமசிடம் புகார் மனு கொடுத்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் சுரேஷ் உறுப்பினர் சங்கர் ஆகியோர் பிரபாகரனுக்கு தரமான நிலையில் செயல்படும் செல்போன் வழங்கப்படுவதுடன், அவருக்கு ஏற்பட்டுள்ள மனவுளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடும், வழக்குச்செலவுக்கு ரூ.3 ஆயிரம் 4 வாரகாலத்திற்குள் வழங்கப்படவேண்டும் என உத்தரவிட்டார்.