நெல்லை: ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு முழுவதும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கோலாகலமாக கொண்டாட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் மூன்று நாட்கள் தேசியக் கொடி ஏற்ற அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற 75 தலைவர்களை தேர்வு செய்து அவர்கள் நினைவிடங்களுக்கு சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்தவும், அவர்களின் குறும்படங்களை ஒளிபரப்பவும், அவர்களது குடும்பத்தினரை கவுரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எட்டயபுரத்தில் உள்ள பாரதியின் நினைவிடத்திற்கு சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்்ந்து அவர்களின் வாரிசுகளையும் கவுரவப்படுத்தினோம். நாளை 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 தினங்கள் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி தேசியக் கொடியை ஏற்றுவதற்கான விழிப்புணர்வு அணிவகுப்பும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 75வது சுதந்திர தினத்தையொட்டி வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் உள்ளிட்ட 75 சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. நாட்டு மக்களிடம் தேச பக்தியை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை பா.ஜ. எடுத்துள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பல லட்சம் இளைஞர்கள் தன்னார்வத்துடன் பதிவு செய்துள்ளனர்.2047ம் ஆண்டு 100வது சுதந்திர விழா தினத்தில் நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். ஒண்டி வீரன் நினைவு தினம் வரும் 20ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது மணி மண்டபத்தில் அமைந்துள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒண்டி வீரனை பெருமைப்படுத்தும் வகையில் நெல்லையில் அன்று அவரது தபால்தலை வெளியிடப்படுகிறது. போதை ஒழிப்பு திட்டத்தில் முதலாவதாக டாஸ்மாக்கை மூட வேண்டும். அப்போது தான் போதை ஒழிப்பு திட்டம் முழுமை பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட பார்வையாளர் நீலமுரளி யாதவ் மற்றும் நிர்வாகிககள் கணேசமூர்த்தி, குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.