இளம்பெண் தற்கொலை வழக்கில் கள்ளக்காதலன் அதிரடி கைது; கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

பெரம்பூர்: ‘இரண்டாவது குழந்தை உனக்கு பிறக்கவில்லை. நான் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டேன்’என்று கணவருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வியாசர்பாடி சாமியார் தோட்டம் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலு (41). இவரது மனைவி வேதவல்லி (33). இவர்களுக்கு கடந்த 10     வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 9 வயதில் சஞ்சனா என்ற மகளும், ஒரு வயதில்  ரோகித் என்ற மகனும் உள்ளனர். அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலு வேலை செய்து வருகிறார்.  வேதவல்லி, பிரபல தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வேதவல்லி தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு  கொண்டார்.  பக்கத்து தெருவில் வசிக்கும் வேதவல்லியின் அக்கா வந்து பார்த்தபோது வேதவல்லி வீட்டில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி போலீசார் வந்து பார்த்தபோது வேதவல்லி உயிரிழந்தது தெரிய வந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சோதனையில், வேதவல்லி தனது டைரியில் ‘என் சாவுக்கு என்னுடன் வேலை பார்த்து வந்த தரணிராஜன் (36)  தான் காரணம்’என எழுதி வைத்துள்ளார்.  மேலும் அவர் ஆடியோ மெசேஜ் ஒன்றையும் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக வியாசர்பாடி போலீசார், திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை பகுதியைச் சேர்ந்த தரணி ராஜன் (36) என்ற நபரை கைது செய்து விசாரித்தனர். அதில் வேதவல்லி மற்றும் தரணி ராஜன் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறி, இருவரும் அடிக்கடி வெளியே சென்று உல்லாசமாக இருந்து வந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், தரணிராஜன் மூலமாக வேதவல்லி கருவுற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தனது கணவருக்கு பிறந்ததாக கூறி வேதவல்லி வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில், வேதவல்லிக்கும் தரணி ராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தரணிராஜன் வேதவல்லியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் மன உளைச்சல் அடைந்த வேதவல்லி நேற்று முன்தினம், ‘என்னுடன் அன்பாக பேசி பழகி வரும் எனது கணவருக்கு துரோகம் செய்துவிட்டேன். எனக்கு பிறந்த இரண்டாவது குழந்தை எனது கணவருக்கு பிறக்கவில்லை.  என் சாவுக்கு காரணமான தரணிராஜனை விட்டு விடாதீர்கள்’என்று உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, தரணிராஜனை  கைது செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். தரணிராஜனிடம் விசாரணை மேற்கொண்ட போது அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என அவர் கூறியதாக தெரிகிறது. எனவே இந்த வழக்கில் உண்மை தன்மை வெளிவர தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை எடுக்க நேரிடும் என போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories: