திருவள்ளூர்: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடி வழங்குமாறு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 14 ஆயிரத்து 237 வீடுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தேசிய கொடியை ஏற்ற வைக்கும் நோக்கத்தில் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தேசியக்கொடி வழங்கும் பணி தொடங்கியது.