மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்க விழா; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

திருவள்ளூர்: மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிரின்ஸ் ஸ்ரீவாரி மேல்நிலைப் பள்ளிகளின் சார்பில்  அறிவியல், கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. விழாவுக்கு பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே.வாசுதேவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் வா.விஷ்ணுகார்த்திக், பிரசன்னா வெங்கடேசன், செயலாளர் வா.ரஞ்சனி வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் கே.பி.லதா அனைவரையும் வரவேற்றார். இந்த கண்காட்சியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து, 700க்கும் மேற்பட்ட மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், `பிரின்ஸ் பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் அவர்கள் வாழ்வில் வெற்றிபெற தேவையான அனைத்து முயற்சிகளையும் சிறந்த முறையில் தொடர்ந்து செய்து வருகிறது. அதற்கு இன்று சமுதாயத்தில் பல உயரிய இடங்களில் இருக்கும் இப்பளியில் முன்னாள் மாணவர்களே சாட்சி. அறிவியலும், கலையும் பிரிக்க முடியாக இணைந்த ஒன்றாகும்.

நம்மனதில் எழும் கலை உணர்வுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளாக உருவாகிறது. மனித குலத்தின் வளர்ச்சி அறிவியலால் மட்டுமே சாத்தியம். மாணவர்கள் பாட புத்தகங்களையும் தாண்டி அன்றாட நிகழ்வுகளை கூர்ந்து நோக்கி அதில் உள்ள சிறந்த விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். கல்வியுடன்கூடிய அறிவியல், கலை பண்பாடுகளையும் சிறந்த முறையில் கற்று சமுதாயத்திற்கு பயனளிக்கும் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்கி வாழ்வில் வெற்றிபெற வேண்டும்’என்றார். முன்னதாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சியின் 14வது மண்டல தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் ஆகியோர் பிரின்ஸ் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து  துவக்கி வைத்தனர். விழாவில் மாநிலக் கல்லூரி பேராசிரியர் எஸ்.ரகு, சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஜே.கே.மணிகண்டன், ஷர்மிளாதேவி திவாகர், ஷெர்லி ஜெய், சமீனா செல்வம், பிரின்ஸ் பள்ளிகளின் கல்வி ஆலோசகர்கள் கே.பார்த்தசாதி, எம்.தருமன், எ.ன்.சிவப்பிரகாசம், பி.ஆர்.ரவிராம், முனைவர் ஷர்மிளா, நிவேதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: