திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் கிராம சபை வரும் 15-ம் தேதி நடத்த வேண்டும்; கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் 75வது சுதந்திர நாளினை சிறப்பிக்கும் வகையில் இந்தாண்டு முழுவதும் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா என அரசினால் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக அனைத்து வீடுகளில் தேசிய கொடி என்ற நிகழ்ச்சி ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றிட வேண்டும். மாவட்டத்தின் நகர்ப்புற மற்றும் ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு நிறுவனங்களான பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்களிலும் தேசிய கொடி ஏற்றிட வேண்டும். மேலும் சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.

ஊராட்சி தலைவர்களுக்குப் பதிலாக வேறு எவரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கொடியினை அவமதிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15ம் தேதி கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. ஊராட்சிகளின் 1.4.2022 முதல் 31.7.2022 வரை காலத்திற்கான வரவு செலவு அறிக்கை, அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி, சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010-மறுகணக்கெடுப்பு, ஜல்ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் ஊரகம் மற்றும் பிற துறை, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன் திருவிழா திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: