செய்துங்கநல்லூர், ஆக. 12: கருங்குளம் கோயிலில் ஐம்பொன் ஐயப்பன் சிலை, திருவாச்சி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில், பிரசித்திப் பெற்ற ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பூசாரி முத்துக்கிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு கோயிலை அடைத்து சென்றார். நேற்று காலை வந்து பார்த்த போது கோயிலின் உள்ளே இருந்த மரக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கோயிலில் மூலவருக்கு முன்புறமிருந்த ஒன்றரை அடி உயரம், 30 கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் ஆன உற்சவர் ஐயப்பன் சிலை கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் 10 செமீ உயரமுள்ள ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை, அருகில் இருந்த அறையில் வெண்கலத்தில் ஆன திருவாச்சி உள்ளிட்ட சில பொருட்களும் திருடு போயிருந்தது.