அரவக்குறிச்சி, ஆக. 12: அரவக்குறிச்சி பள்ளபட்டி பகுதியில் செல்போனில் பேசியபடியே வாகனங்கள் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். செல்போனில் பேசியபடியே வாகனங்கள், ஓட்டுதல் மது போதையில் ஓட்டுதல் ஆகிய போக்குவரத்து விதி மீறல்களால் அடிக்கடி சாலை விபத்துக்களினால் உயிரிழப்பு கூட ஏற்படுகின்றது. இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்கள், பள்ளிவாகணம் ஓட்டுபவர்கள், காரில் வருபவர்கள் என சர்வ சாதாரணமாக செல்போனில் பேசியபடியே வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் ஓட்டுவதில் கவனம் இல்லாமல் வாகணத்தின் வேகம் அதிகரித்து அதிவேகத்தில் வருகின்றனர். அரவக்குறிச்சியில் தாராபுரம் ரோடு, கடைவீதி, புங்கம்பாடி கார்னர், பள்ளபட்டி ரோடு அரசு மருத்துவமனை அருகில், பள்ளபட்டியில் பஸ் நிலைய வளைவான ரோடு, திண்டுக்கல் ரோடு, ஷாநகர் கார்னர் என் மக்கள் அதிக நடமாட்டமுள்ள பகுதிகளில் செல்போனில் பேசியபடியே வாகனங்கள் ஓட்டுகின்றனர்.