குளித்தலை, ஆக. 12: சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ளது. ரத்தினகிரீஸ்வரர் கோவில் இத்திரு கோவில் 1017 படிகள் உயரம் கொண்டதாகும் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவார விழா சித்திரை மாதம் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கோவிலில் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் வருவது காலங்காலமாக நடந்து வருகிறது. இதற்காக பக்தர்கள் பவுர்ணமி தினத்தன்று விரதம் இருந்து மலையைச் சுற்றி வந்து சாமி தரிசனம் செய்து வழிபடுவது சிறப்பு என கருதி இந்த பவுர்ணமி தினத்தன்று வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் பாதையில் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
அதன்படி பவுர்ணமி நாளான நேற்று அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். கிரிவல பாதையில் அமைந்து உள்ள ஆதி மூகாம்பிகை கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வசதிக்காக சென்ற திமுக ஆட்சியில் எம்எல்ஏ மாணிக்கம் முயற்சியால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் அய்யர்மலை ரத்தின கிரீஸ்வரர்கோவிலில் ரோப் கார் திட்டம் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின் பேரில் ரோப்கார் பணிகள் முடுக்கி விடப்பட்டு சமீபத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனால் பக்தர்கள் மிகுந்து எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர் அதனால் வரும் சோமவாரத்திற்குள் அய்யர்மலை ரோப் கார் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.