சேலம், ஆக. 11: சேலத்தில் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் லைன்மேடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் சிவ(16). அங்குள்ள உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 8ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட சிவ, சீலநாய்க்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவயின் உடல்நிலை மோசமானதையடுத்து, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, மாணவியின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறி, அவரது உறவினர்கள் திடீரென மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும், சேலம்-திருச்சி சாலையில் அமர்ந்து சில நிமிடங்கள் மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.