மேச்சேரி, ஆக.11: தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முதல் நாளான கடந்த திங்கட்கிழமை, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று அதிகாலை முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், மா விளக்கு ஊர்வலம் நடந்தது. பின்னர் மாலையில் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்துதல், ஆகாய விமான அலகு குத்துதல் நடைபெற்று ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். நாளை மாலை, வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். நிகழ்ச்சியையொட்டி தாரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.