கரூர், ஆக. 11: சுதந்திர அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 13ம்தேதி முதல் 15ம்தேதி வரை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி புகைப்படம் எடுத்து அனுப்புமாறு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், சிபிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வீடுகளில், தலைமைச் செயலாளர், ஆட்சியர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆகஸ்ட் 13ம்தேதி முதல் 15ம்தேதி வரை தேசிய கொடியை ஏற்றி அதனை புகைப்படமாக எடுத்து, அந்த நகலை, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.