திருப்பூர், ஆக. 10: திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கொங்கு சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். இந்த அணை கட்டும் போது, அணை நடுவில் உடைந்து கொண்டே இருந்த காரணத்தால், உடையும் பகுதியில் நல்லம்மன் என்ற சிறுமி உயிர் தியாகம் செய்ததை அடுத்து அந்த அணை கட்டப்பட்டு வலுவாக இருப்பதாகவும், இதனால் நல்லம்மனுக்கு வழித்தோன்றல்கள் ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடத்தி வருவதாக காலங்காலமாக இப்பகுதியை சேர்ந்த கிராம மக்களின் பழக்க வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அணை நடுவிலுள்ள நல்லம்மன் கோயில் முழுமையாக மூழ்கி இருக்கிறது. இந்த ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோயில் விழா குழுவினர், ஆற்றங்கரையில் பொங்கல் வழிபாடு நடத்த முடிவு செய்தனர். நல்லம்மன் தடுப்பணைக்கு அருகில் செல்ல முடியாத நிலையில் வெள்ளம் தடுத்தபோதும், ஆற்றங்கரையில் பச்சை குடிசை அமைத்து நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடந்து வருகிறது. இதில் ஏராளமான கலந்து கொண்டு பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.