ஊட்டி, ஆக. 10: போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாள் அனுசரிப்பது தொடர்பாக, அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், போதை பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டினையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். விளையும் பயிர்களை நாசம் செய்யும் களையாக சமூகத்தில் முளைத்து விட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை வேரோடு களையெடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாள் அனுசரிப்பது தொடர்பான துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும், துறை அலுவலர்கள் போதை பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து பள்ளிக்கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு இது தொடர்பான பழக்கங்கள் ஏதேனும் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.