மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நண்பனை கொன்ற 2 பேர் கைது

தேன்கனிக்கோட்டை, ஆக.10: தேன்கனிக்ேகாட்டை அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், நண்பனை அடித்து கொன்ற 2பேரை போலீசார் கைது செய்தனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கும்பார தெருவை சேர்ந்தவர் முத்தப்பன் மகன் சக்திவேல் (19). கார்பென்டர் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 7ம் தேதி தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் நிலத்தில் அமர்ந்து நண்பர்களான தேன்கனிக்கோட்டை நேதாஜி ரோட்டை சேர்ந்த திம்மப்பா மகன் வரதராஜ்(21), கிருஷ்ணமூர்த்தி மகன் சேகர் (22) ஆகியோருடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது சேகர், சக்திவேலிடம் இருந்த கூலிங் கிளாஸ் கண்ணாடியை பறித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கைகலப்பாக மாறியது.

அப்போது, சேகர் தனது நண்பரான வரதராஜூடன் சேர்ந்து சக்திவேலை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த சக்திவேல் கதறி துடித்தார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், வரதராஜ், சேகர் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: