தூத்துக்குடியில் மின்சார சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தூத்துக்குடி,ஆக.9: ஒன்றிய அரசு மின்சார சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததை கண்டித்து தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலை முன்பு தமிழ்நாடு விவசாயம் சங்கம் சார்பில் மின்சார சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. ஒன்றிய பாஜ அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மின்சார சட்ட திருத்த மசோதாவை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் பாளை ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் சாதாரண ஏழை மக்களுக்கு பாதிப்பை உருவாக்கும் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை பாதிக்கும் இந்த மின்சார சட்ட மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மின்சார சட்ட மசோதா நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

 

மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மின்சார சட்ட மசோதா நகலை எரித்ததுடன் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் ராகவன், பொருளாளர் நம்பி ராஜன், துணை தலைவர்கள் சீனிவாசன், கணபதி, நடராஜன், நிர்வாகிகள் மணி, செல்வராஜ், சங்கிலி பாண்டி, ஏ.எம்.முருகன், ராமசந்திரன், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: