திருப்பூர், ஆக.9: திருப்பூரில் கட்டி முடிக்கப்பட்ட தீயணைப்பு நிலைய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். திருப்பூர், குமார் நகர் பகுதியில் வடக்கு தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. வடக்கு தீயணைப்பு எல்லைப்பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை உள்ளது. வடக்கு தீயணைப்பு துறைக்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு சிறிய தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ்கள் உள்ளது. மாவட்ட தீயணைப்பு அலுவலமும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. அதே போல் அவிநாசி தீயணைப்பு நிலையமும் சிறிய அளவில் இருந்தது. இதனால், தமிழக அரசு திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலகம் மற்றும் வடக்கு தீயணைப்பு நிலையம் கட்டுமான பணிக்கு 2.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.