அறந்தாங்கி, ஆக.9: அறந்தாங்கி அருகே இடையன்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா இடையங்கோட்டை கிராமத்தில் அமைந்து அருள்பாளித்து வரும் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருந் திருவிழாவை முன்னிட்டு கடந்த 31ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள், சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இடையங்கோட்டை, சீனமங்கலம்,திட்டக்குடி, வீரராகவபுரம், மேல்மங்கலம், கருங்குழிக்காடு, களக்குடிதோப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.