கரூர், ஆக. 8: கருர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையின் பிரதான சாலையில் இருந்து வஉசி வடக்குத் தெரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கான சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. ஆனால், குடியிருப்புகளுக்கு ஏற்றவாறு தெருவிளக்கு வசதி குறைவாக உள்ளது எனக் கூறப்படுகிறது. தாந்தோணிமலை பிரதான சாலையில் இருந்து வடக்குத்தெரு, ராயனூர், வெங்கடேஷ்வரா நகர், குறிஞ்சி நகர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் இந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், வஉசி தெரு வடக்குத்தெரு பகுதியில் தேவையான அளவு தெரு விளக்கு இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, இந்த பிரச்னையை சரி செய்யும் வகையில் இந்த தெருவில் கூடுதலாக மின் விளக்கு வசதி கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.