சேலம், ஆக.8:சேலம் குகை எஸ்எம்சி காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது 13, 12 வயது கொண்ட மகள்கள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திடீரென வீட்டில் இருந்து வெளியேறினர். 7, 6ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவிகளை அக்கம் பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் பெற்றோர் தேடினர். ஆனால், எங்கும் இல்லாததால் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். உடனே போலீசார் உஷார்படுத்தப்பட்டு, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணியளவில் மூங்கப்பாடி மாநகராட்சி பள்ளி அருகே தனியாக சுற்றித்திரிந்த இரு மாணவிகளையும் ஏட்டு சரவணன் மீட்டார். அவர்களிடம் விசாரித்தில், பெற்றோர் திட்டியதால் வீட்டில் இருந்து இருவரும் வெளியேறினோம் என மாணவிகள் தெரிவித்தனர். பின்னர், மாணவிகளுக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இச்சம்பவம் நள்ளிரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.