நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. நேற்று காலை முதலே மழை பெய்ய துவங்கிய நிலையில் அவ்வப்போது மழையின் வேகம் அதிகரித்தது. இதனால், பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. மேலும், மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள அபாயகர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலை கண்டி பகுதியில் அபாயகர நிலையில் காணப்பட்ட 2 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. நேற்றும் கல்லக்கொரை அரசுப்பள்ளி அருகே விழும் நிலையில் இருந்த மரங்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வெட்டி அகற்றினர். இதேபோல், நஞ்சநாடு அருகே கப்பத்தொரை பகுதியில் சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இப்பகுதியில் நெடுஞ்சாலைதுறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். முத்தொரை அருகே சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு நெடுஞ்சாலைதுறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.