ஊட்டி, ஆக.6: ஊட்டியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு படகு இல்ல சாலையில் மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.ஊட்டி நகரின் மைய பகுதியில் கோடப்பமந்து கால்வாய் செல்கிறது. இக்கால்வாய் கோடப்பமந்து பகுதியில் துவங்கி சுமார் 3 கிமீ தூரம் சேரிங்கிராஸ், ஏடிசி என நகருக்குள் சென்று ஊட்டி ஏரியில் இணைகிறது. இந்த கால்வாயின் இரு புறங்களிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் இருந்து அனைத்து விதமான கழிவுகளையும் இதில் கொட்டி விடுகின்றனர். இதனால், கோடப்பமந்து கால்வாயில் அடித்துச் செல்லப்படும் அனைத்து கழிவுகளும் கால்வாயில் தேங்கி கிடக்கின்றன. இதுதவிர விளைநிலங்களில் அடித்து வர கூடிய மண் கால்வாயில் படிந்து மண் திட்டுகள் உருவாகியுள்ளன. இதனால், கால்வாயின் கொள்ளளவு குறைந்துள்ளது. அதீத கனமழை பெய்யும் சமயங்களில் இக்கால்வாயில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கழிவுநீருடன் மழைநீர் கலந்து கீரின்பீல்டு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன.