கலைத்துறையில் சிறந்து விளங்கும் 15 பேருக்கு விருது

திருச்சி: கலைத்துறையில் சிறந்து விளங்கும் 15 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஆண்டுதோறும் மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கலைஞர்களை மாவட்டந்தோறும் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க திட்டமிட்டுள்ளது. அதில் திருச்சி மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்ய கடந்த 27ம் தேதி அன்று நடைபெற்ற கலைஞர்கள் தேர்வு குழு கூட்டத்தில் 15 சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம், குரலிசை, நாடகம், கிராமிய பாடகர், நாதஸ்வரம், கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் தோ்வு செய்யப்பட்டு உள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள கலைஞர்களுக்கு 5 வகையாக விருதுகளின் கீழ் கவுரவிக்கப்பட உள்ளனர். அதில் கலை இளமணி விருதின்கீழ் மு.இதிகாசினி (பரதநாட்டியம்), எ.ரஞ்சனாதேவி (ஓவியம்), மோ.பி.சுகித்தா (சிலம்பம்). கலை வளர்மணி விருதின்கீழ் மு.ஜெயவர்தினி (ஓவியம்), ஷபின் பிரைட் (பரத நாட்டியம்), ரோ.ஆனந்தராஜ் (கரகாட்டம்), கலைச்சுடர்மணி விருதின்கீழ் அ.லீமாரோஸ் (குரலிசை), மீ.விஜயராகவன் (நாதஸ்வரம்), அ.ஈஸ்வரி (நாடகம்), கலை நன்மணி விருதின்கீழ் எ.தர் (நாடகம்), ரா.உஷாராணி (நாடகம்), வைரமுத்துசாமி (கிராமிய பாடகர்), கலை முதுமணி விருதின்கீழ் செ.தங்கராசு (நாடகம்), மா.சரஸ்வதி (நாடகம்), வே.மூர்த்தி (நாடகம்) என மொத்தம் 15 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: