துறையூர்: துறையூர் பாலக்கரை பகுதியில் போலீசாரின் வாகன சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துறையூர் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் துறையூர் நகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கரை பகுதியில் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். பச்சபெருமாள்பட்டியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த அந்த காரில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.