காஞ்சிபுரம்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோருக்கு கோவிட் உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் புதிய திட்டத்தை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்துக்கு செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் கேர் 1 மற்றும் கேர் 2 என்ற 2 வகை திட்டங்களை உள்ளடக்கியது, கேர் 1 திட்டத்தின்படி 2020 - 2021 மற்றும் 2021 - 2022 ஆகிய 2 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தாமாகவோ அல்லது தமது வாரிசுகள் மூலமோ ஏற்கனவே உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதேபோன்று இன்னொறு நிறுவனத்தை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் தொழிலைத் தொடங்க 25 சதவீதம் அரசு மானியத்துடன் (அதிகபட்சமாக வங்கி ரூ. 25 லட்சம் வரை) நிதி உதவி வங்கியின் மூலம் வழங்கப்படும். இதில், திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை இருக்கலாம்.