பிக்பாக்கெட் அடித்தவர் கைது

திருமங்கலம்: திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏற நின்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பிக்பாகெட் அடித்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருமங்கலம் அடுத்த கிழவனேரியை சேர்ந்தவர் சேதுராமன் மகள் ஜெயலட்சுமி(21). இவர் நேற்று முன்தினம் ஊருக்கு செல்வதற்காக திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயலட்சுமி கையில் வைத்திருந்த கைப்பையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.9 ஆயிரத்து 500 பணத்தை பிக்பாக்கெட் அடித்துகொண்டு ஓடினார். ஜெயலட்சுமி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் விரட்டி சென்று பிக்பாக்கெட் ஆசாமியை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் திருமங்கலம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் சிவகாசி திருத்தங்கலை சேர்ந்த ரவிக்குமார்(43) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் ஜெயலட்சுமியை தவிர்த்து மற்றொரு பெண்ணிடம் செல்போனை பிக்பாக்கெட் அடித்து வைத்திருந்தது தெரியவந்தது. இரண்டு செல்போன் மற்றும் ரூ.9 ஆயிரத்து 500யை கைப்பற்றிய போலீசார் ரவிக்குமாரை கைது செய்தனர்.

Related Stories: