திருமணம் செய்ய மறுத்த காதலனை கரம் பிடித்த இளம்பெண்

விருத்தாசலம், ஆக. 4: விருத்தாசலம் ஆலடி ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் ராயப்பன் மகள் ஆரோக்கிய ஷாலினி(21). இவரும் விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அருள்ராஜ்(27) என்பவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் பல இடங்களில் ஊர் சுற்றி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டால் குடும்பம் நடத்த முடியாது, அதனால் நான் வெளிநாடு சென்று சம்பாதித்து விட்டு வருகிறேன். அதுவரை காத்திரு எனக் கூறி அருள்ராஜ் கடந்த 2016ம் ஆண்டு வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் வரும் வரை ஆரோக்கிய ஷாலினி காத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன் அருள்ராஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் சென்று ஆரோக்கிய ஷாலினி தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார். ஆனால் அவர் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியஷாலினி நேற்று முன்தினம் தொரவளூரில் உள்ள அருள்ராஜ் வீட்டிற்கு சென்று மீண்டும் மன்றாடி கேட்டுள்ளார். ஆனால் அப்போதும் அவர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆரோக்கிய ஷாலினி தற்கொலைக்கு முயன்று கையில் வைத்திருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இது குறித்த புகாரில் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரின் பெற்றோரையும் அழைத்த போலீசார் அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே உள்ள வண்ண முத்து மாரியம்மன் கோயிலில் போலீசார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

Related Stories: