கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நெமிலி பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெமிலி, மாதா கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஒடிசாவை சேர்ந்த ரன்னித்நாத் (34) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் இருந்து,  21 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அவனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதன்முடிவில், இங்குள்ள தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் ஏற்றி வரும் லாரிகள் மூலம் கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்ததும், பின்னர், அதை வீட்டில் பதுக்கி வைத்து, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரன்னித்நாத்தை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வரும் ரன்னித்நாத் கூட்டாளியை  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: