ஒன்றிய அரசு அரிசிக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏழை மக்கள், சில்லறை வியாபாரிகள் பாதிப்பு; ரத்து செய்ய கோரிக்கை

திருவள்ளூர்: ஒன்றிய அரசு இதுவரை டிரேட் மார்க் என்று சொல்லக்கூடிய இண்டியா கேட் உள்ளிட்ட உயர் ரக அரிசி ரகங்களுக்கு மட்டுமே வரி விதித்தது.  ஆனால் தற்போது நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலில் பிராண்டட் அரிசி, பிராண்டட் அல்லாத அரசி ரகங்களுக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க உத்தரவி பிறப்பிக்கப்பட்டது. ஒரு கிலோவிலிருந்து 25 கிலோ வரை வாங்கும் அரிசிக்கு 5 சதவிகித வரி செலுத்தியே வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதில் 25 கிலோவுக்கு மேல் அரிசி வாங்கும் போது ஜிஎஸ்டி வரி கிடையாது என்று கூறப்படுகிறது.  கடந்த காலங்களில் சிறு விவசாயிகள் குறைந்த அளவே நெல்லை உற்பத்தி செய்து 10 மூட்டை, 20 மூட்டை என 100 மூட்டை வரை அரிசி ஆலைக்கு கொண்டு வந்து அதனை அரிசியாக்கி எளிதில் விற்பனை செய்து விடுவதுண்டு.  ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிறு விவசாயிகள் அரிசி ஆலைக்கு கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து தமிழ்நாடு அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் கே.ஜி.கந்தசாமியிடம் கேட்டதற்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி என்பது இல்லாமல் இருந்த நிலையில்  ஒன்றிய  அரசின் இந்த 5 சதவிகித ஜிஎஸ்டி வரிவிதிப்பால் 1 கிலோ, 5 கிலோ, 10 கிலோ என சில்லரை விற்பனையில் அரிசியை ஏழை எளிய மக்கள் வாங்கி முடியாத நிலை உருவாகும் என்றார்.   மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்துமே பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் நிலை தற்போது உள்ளது. அதே போல் அரிசியும் மூட்டைகளில் அடைத்தே பெரும்பாலான வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். 25 கிலோ வரை சில்லறையில் அரிசி வாங்கும் போது அதற்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் 25 கிலோவுக்கு மேல் ஜிஎஸ்டி வரி கிடையாது என்பதால் கூடுதலாக ஒரு கிலோ அரிசியை வைத்து 26 கிலோவாக மூட்டை கட்டும் பணியில் ரைஸ் மில் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது 50 அரிசி ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதிலும் திருவள்ளூர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் 10 முதல் 12 வரை மட்டுமே அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது.  ஆனால்  பெரும்பாலான மக்கள் சன்னமான அரிசி வகைகளையே  பயன்படுத்துகின்றனர். இதனால் தமிழகத்திற்கு தேவையான நெல் வகைகளை ஆந்திரா மற்றும், கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டன் வரை நெல்லை கொள்முதல் செய்து அரிசி ஆலைகளில் அரிசியாக்கி விற்பனை செய்கின்றனர்.  எனவே மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான நெல்லுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.  என்று ரைஸ் மில் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: