இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

விழுப்புரம், ஜூலை 29:கள்ளக்குறிச்சி மாவட்டம் பால்ராம்பட்டை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு, கடந்த 2018ம் ஆண்டில் பூட்டை கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்தனர். அப்போது அந்த பெண்ணிடம் பெரியசாமி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகியுள்ளார். பின்னர் அந்த பெண் பெரியசாமியின் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார். மேலும் அந்த பெண்ணை பெரியசாமி, அவரது தந்தை மாரி, தாய் சந்திரா, உறவினர் காரனூரை சேர்ந்த கருப்புதுரை ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பெரியசாமி உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி (பொ) சாந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் பெரியசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். மற்ற 3 பேர் மீதும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Related Stories: