நெய்வேலி, ஜூலை 29: பயிற்சி பொறியாளர் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட தேர்வு ஆகாதது ஏன் என நெய்வேலியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பயிற்சி பொறியாளருக்கு தேர்வு நடத்தி 299 பேர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசால் நடைபெறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளில் கூட தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் தேர்வு பெற்று வரும் போது என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்திய தேர்வில் ஒருவர் கூட தேர்வு ஆகாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் என்எல்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுகிறது என்று தெரிகிறது. குறிப்பாக என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு வட இந்தியர்களை கொண்டு வர மேற்கொள்ளும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.