சேத்தியாத்தோப்பு, ஜூலை 29: சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு விநாயகபுரத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோயிலில் 22ம் ஆண்டு ஆடி அமாவாசை பெருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. கடந்த 22ம் தேதி மாலை மங்கள இசையுடன் கோயிலில் கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து அங்காளபரமேஸ்வரி பிறப்பு, வளர்ப்பு, பம்பை உடுக்கை இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு வெள்ளாற்றங்கரையிலிருந்து மேளதாளத்துடன் அங்காளபரமேஸ்வரி வீதியுலாவும், பெரியாண்டவர், பெரியநாயகி என்கிற அங்காளபரமேஸ்வரி திருக்கல்யாண வைபோகமும் நடைபெற்றது. குறுக்கு ரோடு விநாயகபுரம் பகுதி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.