கடலூர், ஜூலை 29: கடலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் பராசக்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உற்சவம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று கோயிலில் மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், எல்லை கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக பராசக்தி மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். இதையடுத்து கொடிஏற்றப்பட்டதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று விழாவின் முக்கிய அம்சமாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் 12.30 மணிக்கு சாகை வார்த்தல், 1 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 5 மணியளவில் செடல் உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.