செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜே.மேவிஸ் தீபிகா சுந்தரவதனா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மக்கள் நீதிமன்றத்தை துவங்கிவைத்தார்.
இதில், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ்.மோகனகுமாரி, கூடுதல் மாவட்ட நீதிபதி காயத்திரி, முதன்மை குற்றவியல் நடுவர் நீதிபதி ராஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி பி.ஆர்.சுப்ரஜா, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான எஸ்.மீனாட்சி, மாவட்ட முன்சீப் நீதிபதி எஸ்.மஞ்சுளா, நீதித்துறை நடுவர்கள் ஆர்.ரீனா, ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் குமார் செயலாளர் மகேஷ்குமார், வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து, வரதட்சனை வழக்கு, வங்கி வழக்கு விவாகரத்து வழக்கு என மொத்தம் 8433 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், 3927 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில், மொத்தம் 22 கோடியே 79 லட்சத்து 16 ஆயிரத்து 4 மதிப்பிலான காசோலைக்கான வழக்குகள் சமரசம் செய்து முடித்து வைக்கப்பட்டது. இதற்கான தொகை சம்பந்தப்படவர்களுக்கு காசோலைகளாக வழங்கப்பட்டது.